Thursday, February 1, 2024

நீதிக்கதை தற்பெருமை வேண்டாம்

 நீதிக்கதை


 தற்பெருமை வேண்டாம்



காட்டில் சிங்கம் அயர்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தது. அப்பொழுது, அதன் அருகே உள்ள மரக்கிளையில் ஒரு சேவல் ஏறி அமர்ந்திருந்தது.


அதுவரை சும்மா இருந்த சேவல் "கொக்கரக்கோ" எனக் கூவ ஆசைப்பட்டு, உடன் சத்தமாகக் கூவியது.


சேவலின் கொக்கரக்கோ சத்தம் கேட்டதும், நன்றாகத் தூங்கிக் கொண்டு இருந்த சிங்கம் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தது.


ஒருவரையும் காணவில்லை. ஆதலால் மறுபடியும் படுத்துத் தூங்கியது. சிங்கம் படுத்துத் தூங்கிய சிறிது நேரத்தில் மறுபடியும் சேவல் கூவியது.


சேவலின் சத்தத்தில் சிங்கத்தால் தூங்க முடிய வில்லை. கலவரமடைந்து எழுந்த சிங்கம், மரத்தின் மேலே பார்த்தது. சேவல் பெருமையுடன் நின்று கொண்டு இருந்தது.


"ஏய், ஏன் இப்படி காட்டுத் தனமாகக் கத்துகிறாய் என் தூக்கத்தைக் கெடுக்காதே" என எச்சரிக்கை செய்தது


"நான் எவ்வளவு அழகாகப் பாடுகிறேன். என் பாட்டு உனக்குப் பிடிக்கவில்லை என்கின்றாயே. நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். அதனால் பாடிக் கொண்டு தான் இருப்பேன் என்றபடி மீண்டும் கொக்கரக்கோ என அதிக சப்தத்துடன் கூவியது.


அதன் சப்தம் சிங்கத்தின் காதில் மிகவும் கொடூரமாக விழுந்ததால், இனிமேல் என்ன சொன்னாலும் சேவல் கேட்காது என்ற முடிவெடுத்து, இடத்தை மாற்றிக் கொள்வோம் என முடிவு செய்து ஓடியது.


சிங்கம் ஓடும் பொழுது ஒரு கழுதையைப் பார்க்காமல் ஓடியது. ஆனால் கழுதையோ, "சிங்கம் தன்னைக் கண்டு தான் பயந்து ஓடுகிறது" எனக்கூறி கத்தியது.


சிங்கம் காதில் இது விழுந்தவுடன், திரும்பி வந்து கழுதையைத் தாக்கிக் கொன்றது.


நீதி: வீணான தற்பெருமை மனதில் எண்ணக் கூடாது. அப்படி எண்ணுபவர் வேதனை அடைவார்கள்.


No comments:

Post a Comment

Recent Posts

Popular Posts