Monday, February 12, 2024

" படிப்பு சுமையல்ல...."

 " படிப்பு சுமையல்ல...."

...........................................



மாணவ செல்வங்கள் தங்கள்  பாடங்களை அன்றாடம் படித்து விட்டால் எவ்வளவு பாடம் இருந்தாலும் அது சுமையாகத் தெரியாது. சுகமாகத் தெரியும்.


அத்துடன் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டு இருக்கும் போது கவனத்தை எங்கும் சிதற விடாமல் ஊன்றி கவனிக்க வேண்டும்..


மற்றும் எதையும் சாதிக்க வேண்டும் என்ற தாகமும் இருக்க வேண்டும்.ஈடுபாடு என்பது தனித்து திகழ்வது அல்ல. எல்லாவற்றின் மீதும் அக்கறை கொள்பவர்களுக்குத் தான் உழைப்பில் ஈடுபாடு பிறக்கும்.


ஒரு கிராமத்தில் அறிஞர் ஒருவர் இளைஞர்களுக்குக் கல்வி போதித்து வந்தார். அவர் இலக்கு மதிப்பெண்களோ தர நிர்ணயமோ அல்ல. முழுமையான கற்றல் மட்டுமே…


எனவே நிதானமாகவும் அதே சமயம் மாணவர்கள் மனதில் நன்கு பதியுமாறும், அவர் சொல்லிக் கொடுத்து வந்தார்.


ஒரு நாள் தன் மாணவர்களைப் பார்த்து, நீங்கள் எல்லோரும் இப்போது படித்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.


படிப்பது சுகமானதா? சுமையானதா? என்ற ஒரு கேள்வி கேட்டால் சுமையாக இருக்கிறது என்று தான் பலரும் சொல்வீர்கள்.


ஆனால் படிப்பதை சுகமாக மாற்றிக் கொள்ளலாம் என்பதற்கு ஒரு குட்டிக் கதை சொல்கிறேன்…


ஓர் அழகான ஊர். அந்த ஊரில் உள்ள ஓர் இளைஞன் நல்ல கனமாக வளர்ந்த ஒரு பசுமாட்டை எந்தச் சிரமமுமின்றி தன் தோள் மேல் போட்டுக் கொண்டு தூக்கிக் கொண்டு ஊரைச் சுற்றி வந்தான்.


ஊரே அவனை பிரமிப்புடன் பார்த்தது. நல்ல பலசாலி என்றது. எப்படி உன்னால் இவ்வளவு பெரிய மாட்டைத் தூக்கிச் சுமக்க முடிகிறது என்று பலரும் கேட்டனர்.


ரொம்பவும் சுலபம் என்றான் அவன்.


எப்படி? என்றார்கள் மற்றவர்கள்..


இந்தப் பசு கன்றுக் குட்டியாக இருந்த நாளிலிருந்து தினம் தினம் தூக்கிச் சுமந்து கொஞ்சுவேன். அதனோடு விளையாடுவேன். அதுவே பழகி விட்டது. 


இப்படி தினம் தூக்கிப் பழகியதால் அதன் கனம் எனக்குப் பெரியதாகத் தெரியவில்லை என்றான்.


இது ஏதோ படிப்பதற்காக உங்களுக்கு சொல்லப்பட்ட கதை அல்ல.படித்தப் பின்னும் உங்களுக்கு உதவும் பாடம்,” என்றார் அந்த அறிஞர்...


ஆம்.,தோழர்களே..,


அனைத்துப் பெற்றோர்களும்,

ஆசிரியர்களும் கூறும் ஒரே புகார் தங்கள் குழந்தையை தம்மால் கட்டுப்படுத்தவே 

முடியவில்லை என்பது தான்.


உங்கள் குழந்தைக்கு உண்மையான பிரச்சனை என்னவென்று கண்டறியுங்கள், 


அவர்கள் எதில் அதிக ஆர்வம் 

செலுத்துகின்றனர், என்ன செய்தால் குழந்தையை திசை திருப்ப முடியும் என்று கண்டறிந்தாலே போதும், அவர்களை சுலபமாக வழிக்குக் கொண்டு வந்து விடலாம்.✍🏼

No comments:

Post a Comment

Recent Posts

Popular Posts